Reply to Thread New Thread |
|
![]() |
#1 |
|
22.5.08
______ கைலாயத்தில் கலகலப்பாக கலகம் துவங்குகிறது. உமாமஹேஸ்வரியாக யமுனாவின் கோபம், அலட்சியப் பார்வை, சிரிப்பு எல்லாமே நன்றாக அமைந்திருந்தது. தன் பங்குக்கு தானும் கோழை ஒருவனை வீரனாக்கி செல்வம் படைத்த அரசியையும், நாவன்மை படைத்த கலைமகள் அருள் பெற்றவனையும், வீரனின் அடிமை ஆக்குகிறேன் என்று சபதமிட்டுச் செல்கிறார். நாரதர் "ஆம் தேவி" என்று இழுத்து, 'சரஸ்வதி சபத' சிவாஜியை நினைவூட்டுகிறார். சிவாஜியை நினைவூட்டாமல் நடிப்பது கடினம் என்றாலும், இம்மி பிசகாமல் அதே வசனத்தை இயக்காமல் இருந்திருக்கலாம். (நடித்த திரு.ராதாரவி அவர்களும் நடிகர் திலகத்தை போல் செய்யாமல் இருந்திருக்கலாம்) . எல்லோருக்கும் நடிகர் திலகம் படம் நெஞ்சத்தில் நிறைந்து இருக்கிறது என்பதால் நம்மை மகிழ வைக்க இப்படி செய்கிறார்கள் போலும்! அடுத்து நமக்குத் தெரிந்த சரஸ்வதி சபதக் கதையில் வித்யாபதி என்றவன் ஊமை, அவனை பேசவைத்து கலைமகளின் ஆசிப் பெறச் செய்கிறார் சரஸ்வதி. இங்கே கதைப் படி, வித்யாதரன் என்ற இளைஞன் ஊமை அல்ல. மூடன். அதாவது பகுத்தறிவு குறைவாக (மிகக் குறைவாக) பெற்றவன். (வித்யதாராக நடனக் கலைஞரும் நடிகருமான ராம்ஜி நடிக்கிறார். ) 'சரஸ்வதி சபத'க் கதையும், 'மஹா கவி-காளிதாசர்' கதையும் ஒன்றாய் அமைந்தது போல் இருந்தது. வித்யாதரன், மூடனாய் வளர்கிறான். உலையில் அரிசிபோட்டு சோறு வடித்து வை என்று அவன் தாய் கட்டளை இட, இவனோ, உலையில் அரிசி பொங்குவதற்குள் இன்னும் நேரம் ஆகிவிடும், என்று அரிசியை நேராக அடுப்பில் போட்டுவிடுகிறான். தணல் எரியாத குறைக்கு அவன் தந்தை எழுதிய ஓலைச் சுவடியையும் அடிப்பில் போட்டு எரியவிடுகிறான். அவன் தாய் மூடனைப் பெற்றதற்கு கண்ணீர் வடிக்கிறாள். இது இப்படி இருக்க, இன்னொரு செல்வந்தன் வீட்டில் செல்லப் பெண்ணாய் அறிவிற் சிறந்த 'கலையரசி' என்று ஒரு பெண் வளர்ந்து வருகிறாள். தனக்கு வரப் போகும் மணாளன் அறிவில் சிறந்த சான்றோனாக இருக்கவேண்டும் என்ற விருப்பத்தின் பேரில், தன்னை பார்க்க வரும் வரன்களை கேள்விக் கணைகள் கொண்டு எதிர்கொள்ள நினைக்கிறாள். இவளின் தைரியம் கண்டு, அக்காலப்(இக்காலமும் / எக்காலமும் ?!?!) பெண்ணுக்கே உரிய பணிவும் பண்பும் இல்லாதவளாக அவளை வளர்த்து வரும் சித்தியே குறைகூறி முத்திரைக் குத்திவிடுகிறாள் ( மேலும் என்ன நடைக்கிறது என்பது நாளை பார்ப்போம் ) ஒரு சிறு வேண்டுகோள்: இயக்குனர் கவனிக்க வேண்டிய ஒன்று. இறைப் பாத்திரங்கள் தூயத்தமிழில் தான் பேசவேண்டும் என்பதால், அவர்களின் தமிழ், நடைமுறைத் தமிழுக்கு வழுக்குவதில்லை. ஆனால், சாதாரண மக்கள் கதாபாத்திரம் ஏற்போரும், புராணத் தொடர் என்பதால் தூயத் தமிழில் பேசுவதை வழக்காக்கி, தொடர் முழுதும் எல்லாப் பாத்திரங்களும் தூயத் தமிழ் பேசச் செய்திருக்கிறீர்கள். இதில் நடுநடுவே இப்படிப்பட்ட பொதுமக்கள் கதாபாத்திரங்கள் வழக்கு தமிழுக்கு சறுக்கிவிடுகின்றனர். இதை கவனம் கொள்ளவேண்டியது அவசியம். அஃதாவது, ஒன்று, நடைமுறைத் தமிழ் பேசவேண்டும். இல்லையென்றால், புராணத் தொடர் என்பதால் எல்லோருமே தூயத்தமிழ் பேசவேண்டும். இப்படியும் அப்படியுமாய் மாற்றி மாற்றி பேசுவது மனதில் பிசிறுதட்டுகிறது. இதை கவனம் கொள்வது நல்லது. |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|